தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், தமிழக அரசியலில் ஒரு
புதிய அத்தியாயத்தை எழுத முன்வந்துள்ளது. முக்கியக் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்து நிறுத்துவதோடு, முதல்வர் வேட்பாளராக வைகோவை முன்னிறுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஜனவரி 7-ம் தேதி திருப்பூரில் நடைபெற இருக்கும் கூட்டத்தில், இதனை வெளிப்படையாக அறிவிக்க இருப்பதால் ம.தி.மு.க-வினர் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்கள்.
திருப்பூர் நகர ம.தி.மு.க-வினர்ஊரைக் கலக்கும் வகையில் வைகோவை வாழ்த்தியும், வரவேற்றும் நூற்றுக்கணக்கான பேனர்களையும், கொடிகளையும் தயார் செய்த நேரத்தில்தான், முக்கிய நிர்வாகிகளுக்கு வைகோவிடமிருந்து போன். உற்சாகமாக செய்துவந்த ஆயத்த வேலைகளை எல்லாம் அப்படியே சுருட்டி வைத்துவிட்டு, எல்லோரும் அமைதியாகி விட்டார்கள்.
”ஏன் அமைதியாகி விட்டீர்கள்? வைகோ என்னதான் சொன்னார்?” என்று திருப்பூர் நகர ம.தி.மு.க. பொருளாளரான ‘புலி’ மணியிடம் கேட்டோம். ”நல்ல மனப்பான்மையோடு தமிழகத்தின் முக்கியக் கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து எங்கள் தலை வரைப் பிரதானப்படுத்துவது, எங்களை சிலிர்க்க வைக்கிறது. எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் பேனர், ஃப்ளக்ஸ், கொடி என்று ஆரவாரமாகத் தயார் ஆனோம். ஆனால் இதை எப்படியோ தெரிந்துகொண்ட தலைவர் போன் போட்டுப் பேசினார். ‘நல்லாப் புரிஞ்சுக்கோங்க. நடக்கப்போறது நம்ம கழகத்தோட விழா இல்லை. தமிழ்நாட்டின் வருங்காலம் வளமாக்கப்பட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக, நல்ல பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிற்கப்போகும் உன்னதமான மேடை அது. என் மீது பற்று வைத்து, என்னை முன்னிலைப்படுத்த நினைப்பது அவர்களின் பெருந்தன்மை மற்றும் பெரும் நம்பிக்கை. அந்த அங்கீகாரத்தை நாம் அமைதியாக அணுக செய்யவேண்டுமே தவிர, ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடக் கூடாது. கட் அவுட், போஸ்டர் என்று அரசியல்வாதிகள் அலைவதை மக்கள் விரும்புவது இல்லை. போஸ்டர் அடித்தாலும், அடிக்கவில்லை என்றாலும் தனக்காக உண்மையாகச் செயல்படுவது யார் என்பது மக்களுக்குத் தெரியும். அதனால் நாமும் வழக்கமான அரசியல்வாதிகளைப் போன்று செயல்பட வேண்டாம். புதுமையா சிந்திப்போம், மக்கள் மனம் கோணாதபடி நடப்போம். முல்லைப் பெரியாறு விவகாரத்துக்காக கேரளா செல்லும் வழிகளை முற்றுகையிட்டோமே, அப்போது நம்ம கழகத்தோட கொடியோ, போஸ்டரோ ஒன்றுகூட கிடையாது. ஆனாலும் கண்கொள்ளா ஜனக்கூட்டம் திரண்டு நின்னுச்சே! அதுதான் எழுச்சி. கொடி, போஸ்டர் இல்லாம உணர்வுப்பூர்வமா மக்களை திரட்டுகிற சக்தி ம.தி.மு.க-வுக்கு மட்டும்தான் இருக்குது. அடக்கமா நடந்தாலும் அழுத்தமா சாதிக்கப் பிறந்தவங்கய்யா நாம’ என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். தலைவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மையையும், யதார்த்தத்தையும் புரிஞ்சுகிட்டோம்… அமைதியாயிட்டோம்” என்று விளக்கம் கொடுத்தார்.
நல்ல அறிகுறிதான்.
– எஸ்.ஷக்தி