மா.இளவரசு, காஞ்சிபுரம்.
”இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?”
”தேர்தல் கமிஷன் கூடுதல் விழிப்புடன் காரியம் ஆற்றினால், கலைஞர் ஆட்சி கவிழக்கூடும்!”
கு.பாண்டியன், திருவண்ணாமலை.
”கருணாநிதியை இந்தக் காய்ச்சு காய்ச்சுகிறீர்களே… அப்படி என்ன அவர் மேல் கோபம்?”
”20 ஆயிரம் ஈழத் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட போதும், மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிதைக்கப்பட்டபோதும், தன் மகன், மகள், பேரனுக்கு மத்திய அமைச்சர வையில் இடம் பெறுவதில் காட்டிய முனைப்பை, நம் இனத்தைக் காப்பாற்றுவதில் காட்ட மறந்த சுயநலம் ஒன்றுதான் என் கோபத்துக்கு முக்கியக் காரணம்!”
கே.கணேசன், வாணியம்பாடி.
”பல காலம் கட்சி வளர்த்த வைகோ, ராமதாஸ், கம்யூனிஸ்ட்டுகளைப் பின்னுக்குத் தள்ளி, விஜயகாந்த் குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
”சினிமாவின் வீச்சு விஜயகாந்த்தின் துணிச்சல் தமிழரின் ரசனை = தே.மு.தி.க -வின் வளர்ச்சி!”
மா.கதிர், திண்டிவனம்.
”அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்!”
1. ”பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)
மா.மதிபாரதி, சென்னை-91.
”நீங்கள் உயிருக்கு உயிராக நேசித்த காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியே வந்தபோது, தங்கள் மனநிலை எப்படி இருந்தது?”
”நான் உயிர் கசிய நெஞ்சில்வைத்து நேசித்தது காந்தியால் வளர்க்கப்பட்டு, காமராஜரால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் இயக்கம் காமராஜர் கண் மூடியபோதே, மக்கள் நலனுக்காக இயங்கிய காங்கிரஸ் கல்லறையில் புதைக்கப்பட்டுவிட்டது.
நான் இந்திரா காங்கிரஸை எதிர்த்து உருவான ஜனதா, ஜனதா தளத்தில்தான் என் இளமை முழுவதையும் செலவழித்தேன். மூப்பனார், காங்கிரஸைக் கைவிட்டு தனியாகத் தமிழ் மாநில காங்கிரஸை நடத்தியபோது, ‘காமராஜர் ஆட்சி’ அமைக்க விரும்பி எனக்கு அழைப்பு விடுத்தார்.
‘சோனியா காங்கிரஸில் கடைசி வரை இணைய மாட்டேன்’ என்று என்னிடம் அவர் உறுதி அளித்த பின்பே த.மா.கா-வில் சேர்ந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினேன். அவருடைய மறைவுக்குப் பின், 2001-ல் த.மா.கா, சோனியா காங்கிரஸில் சங்க மித்தது என்னை மீறிய நிகழ்வு.
2009 ஜனவரி வரை எட்டு ஆண்டுகள் நான் தமிழ்நாடு காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் நீடித்தது, என் பொது வாழ்வில் நேர்ந்துவிட்ட மாறாத களங்கம்.
இன்று நான் சிறையில் இருந்து விடுபட்ட பறவை. அரசியல் வானில் சுயேச்சையாகச் சிறகசைத்துச் சுதந்திரமாகப் பறக்கிறேன். சோனியா காங்கிரஸில் இருந்த பாவத்துக்குப் பரிகாரம்தான்… ‘இனி, எந்தக் கட்சியிலும் இணைவது இல்லை. இதயத் துடிப்பு நிற்கும் இறுதி நாள் வரை, எந்த ஆட்சி அதிகாரப் பதவியிலும் அமர்வதும் இல்லை’ என்று நேர்ந்து கொண்ட வைராக்கியம்!”
என்.சதானந்தம், விழுப்புரம்.
”எல்லாரையும் சகட்டுமேனிக்குத் திட்டும் நீங்கள், தற்போதைய நேர்மையான 10 அரசியல்வாதிகளைப் பட்டியலிடுங்கள். அதில் நம் இருவரின் முதல் சாய்ஸ் நல்லகண்ணுவாகத்தான் இருப்பார். மீதி 9 பேரை வரிசைப்படுத்துங்களேன்?”
”முதலில் ஒரு திருத்தம். நான் யாரையும் எந்த நிலையிலும் திட்டி, என்னைத் தாழ்த்திக்கொள்வது இல்லை. ‘காமம் செப்பாது கண்டது மொழிதல்’ முக்கியம். யாரையும் இச்சகம் பேசி நான் இன்று வரை அடைய விரும்பியது எதுவும் இல்லை. நெஞ்சில் பட்டதை நேர்படப் பேசுவேன். அச்சமின்றி உள்ளம் உணர்ந்த உண்மை எழுதுவேன். இதனால் எனக்கு ஏற்படும் இழப்பு, வலி போன்றவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
போகட்டும். தரவரிசைப்படுத்த என்னிடம் எந்த ‘அக்மார்க்’ அளவுகோலும் யாரும் வழங்கவில்லை. அதிகப்பிரசங்கியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. நானறிந்து மதிக்கும் அரசியல் நேர்மையாளர் நல்லகண்ணு!”
சு.கார்த்திகேயன், புதுவை.
”நீங்கள் கலைஞரோடு சுமுகமாக இருந்த வரைக்கும் அவர் சரியாக இருந்ததாக எண்ணுகிறீர்களா?”
”ஐந்தாவது முறை கலைஞர் முதல்வரான பின்பு, அவரிடம் நான் கண்ட அணுகுமுறைகளில் நல்ல மாற்றம் தெரிந்தது. தன்னுடைய வாழ்வின் மாலைப் பொழுதில் அவர் நிறை மனிதராக நல்லாட்சி தரப்போகிறார் என்று நெஞ்சார நம்பினேன். வால்மீகியின் ராமாயணத்தை வாசிக்கும்போதும், அருணகிரிநாதரின் திருப்புகழைப் பாடும்போதும் அவர்களுடைய மூலத்தை ஆராய்வது அறிவுடைமை ஆகாது.
நான் உறுப்பினராக இருந்த திட்டக் கமிஷனுக்கும் ஊழலுக்கும் எள்ளளவு தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லா அரசியல் வாதிகளும் ஊழலில் ஊறித் திளைப்பதால், அவருடைய ஆட்சியில் அரங்கேறிய ஊழல் நடவடிக்கைகள் எனக்கு வியப்பைத் தர வில்லை.
ஆனால், ஈழத் தமிழரை அவர் கைவிட்ட விதம் என்னை ரணப்படுத்தியதால், பதவியை உதறிவிட்டு விமர்சனக் கணைகளை வீசத் தொடங்கினேன். அவர் என் மீது பொழிந்த அன்பு அதிகம். இன்று என்னை வாடகை வீட்டில் இருந்து ஆயிரக்கணக்கான புத்தகங் களுடன் வீதியில் நிறுத்தும் அளவுக்கு என் மீது உமிழும் வெறுப்பு மிக அதிகம்!”
மா.ஆதி, சென்னை-65.
”ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் வாயே திறக்காமல்இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?”
”அவர் எந்தப் பிரச்னையிலும் வாய் திறக்காமல் இருப்பதற்கு வழங்கப்பட்டதுதான் பிரதமர் பதவி என்பதை அவர் நன்கு அறிவார்!”
ஆர்.குமார், வந்தவாசி.
”பேச்சுக் கலையில் உங்கள் முன்னோடி யார்?”
” ‘அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக அவர் பேசியிருக்கிறார்!’ என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரிகம் காத்த ‘சொல்லின் செல்வர்’ ஈ.வே.கி.சம்பத்!”
ஞா.செந்தில், திருவத்திபுரம்.
”ஓட்டுக்குப் பணத்தை நான் மறுத்தாலும், வீட்டுக்குள் கவரில் பணத்தை வீசி எறிந்துவிட்டுச் சென்றார்கள் கடந்த தேர்தலின்போது! அந்தப் பணத்தை வீசி எறிய மனம் இல்லாமல் செலவழித்தேன். இப்போதும் பணம் கொடுப்பார்கள் என்கிறார் கள்… நான் என்ன செய்வது?”
”தவறான வழியில் வந்த பணத்தைக் கையால் தொடுவதுகூடக் தகாது. உங்களை மீறி யாராவது வீட்டுக்குள் வீசி எறிந்தால், அந்தப் பணத்தை வீதியில் கையேந்தும் ஏழைகள் பசியாறப் பகிர்ந்துகொடுங்கள். பாவத்தின் கறை பட்ட பணம் புனிதப்பட அது ஒன்றுதான் வழி. பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்கும் ‘சத்தியவான்கள்’ கழுத்தில், நாளை ஊழல் பாசக் கயிறு விழுந்து இறுக்கும்போது, காப்பாற்ற ‘சாவித்திரிகள்’ கிடைக்க மாட்டார்கள்!”
ஆர்.ராஜேந்திரன், திருத்தணி.
”உங்களைப் போன்றவர்களால் ஏன் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை?”
”ஆட்சியில் பதவியைப் பெறுவதும், பணத்தைப் பெருக்குவதும்தான் வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் தோற்றுவிட்டது உண்மை. 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், நான்கு செப்புக் காசுகளைக்கூட நேர்மைக்கு மாறாகவும், அறத்துக்குப் புறம்பாகவும் சேர்க்காத தூய்மைதான் பெருமைக்குரிய வெற்றி என்றால், என்னைப் போன்றவர்கள் வெற்றியாளர்களே!
பதவியை மறுத்து, பணத்தைத் துறந்தவர்… அரசியலில் தோற்றவரா… ஜெயித்தவரா?”
மு.மணிவாசகம், சென்னை-15.
”பாரதி என்றதும் தங்கள் நினைவில் வருவது?”
” ‘மண்ணில் யார்க்கும் அடிமை செய்யோம்’ என்று வைர வரி. ‘அன்பிற் சிறந்த தவமில்லை’ என்ற வேத வாசகம்!”
கே.முத்து, பெண்ணாகரம்.
”நல்ல நோக்கத்துக்காகத் தொடங்கப்பட்ட தலித் அமைப்புகள் அரசியல் லாபத்துக்காகத் தடம் புரள்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
”சின்னச் சின்ன சுகங்களுக்காக தலித் தலைவர்கள் சமரசங்களுக்கு ஆட்பட்டுவிடுவதற்காக வருந்துகிறேன். காந்தியைக்கூட சிறிதும் சமரசத் துக்கு இடமின்றி எதிர்த்த அம்பேத்கரைப்போல் இவர்களும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்!”
ஆர்.ராஜா, வல்லக்கோட்டை.
”அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடும் மாவோயிஸ்ட்டுகள் பற்றி உங்கள் கருத்து?”
”அவர்களுடைய இலக்கு புனிதமானது. அதை அடைவதற்கு அவர்கள் தேர்ந்து எடுக்கும் பாதை பயங்கரமானது. வன்முறையில் கட்டப்படும் சமூக மாற்றங்கள் சரிந்து விடும் என்பதுதான் சரித்திரம்!”
இரா.பாலு, திருப்பத்தூர்.
”ராகுல் காந்தி பற்றி உங்கள் மதிப்பீடு?”
”களை பறிக்காமலேயே விளைச்சலைப் பெருக்க வீண் கனவு காணும் இளம் விவசாயி!”
கே.வெங்கடேசன், மருவத்தூர்.
”மறைந்த அரசியல் தலைவர்களுள் யாரேனும் ஒருவரை உயிர் பிழைக்கவைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. யாரைப் பிழைக்கவைப்பீர்கள்?”
”மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முழுவதுமாக நிறைவேற்றி முடிக்க நான் உயிர் பிழைக்கவைக்கும் ஒரே மனிதர், பெருந்தலைவர் காமராஜர்!”
மா.சுரேஷ், வேலூர்.
”தி.மு.க, அ.தி.மு.க இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும்விட்டு தமிழக மக்கள் வெளிவரவே முடியாதா?”
”நடிப்புச் சுதேசிகளை நம்புவதை விடுங்கள். நல்லது தானே நடக்கும்!”
கே.சுபாஷ், திருவண்ணாமலை.
”தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?”
”எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!”
என்.குமரேசன், விழுப்புரம்.
” ‘ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?”
”வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!”
ஆர்.ராஜா, திமிரி.
”அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?”
”பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!”
எம்.ராஜேஷ், பெருங்களத்தூர்.
”என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்… சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?”
” ‘என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.
ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம். இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!”
ஆர்.தனசேகரன், சென்னை-75.
”டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு… அடுத்து?”
”வீட்டுக்கு ஒரு கட்டில்… பக்கத்தில் ஒரு தொட்டில்!”
என்.மனோஜ்குமார், ஆரணி.
”வைகோ…?”
”நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!”
பா.குமரய்யா, சென்னை.
”இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?”
”மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.
உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும். மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும். ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்… நடுத்தர வர்க்கம் ‘மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?
த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.
”இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
”கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, ‘குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்… இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!”
கே.சீனிவாசன், மதுரை.
”ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?”
”தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!”
சு.ஜானகி, செங்கல்பட்டு.
”சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?”
”கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் ‘மதராசபட்டினம்’. இந்தியில் ‘குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!”
என்.பாலகிருஷ்ணன், மதுரை.
”மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா… ஏன்?”
”வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!”
கு.பாண்டியன், திருப்பத்தூர்.
”சுயமரியாதை என்றால் என்ன?”
”தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்… சுயமரியாதை!”
சி.மணி, வேலூர்.
”திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?”
” ‘பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ – ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!”
என்.பாலகிருஷ்ணன், மதுரை.
”வரும் காலங்களில் ‘நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?”
”தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் ‘நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!”
எம்.குணசீலன், மேட்டுப்பாளையம்.
”தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே ‘தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?”
”ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!”
சு.ஹரி, திருப்பூர்.
”நீங்கள் உங்களை ‘அரசியல் அநாதை’ என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், தற்போது வைகோவைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?”
”எதுவும் இல்லாதவன் ஏழை. ஆதரிப்பார் அற்றவன் அநாதை. இருப்பதைத் துறப்பவன் துறவி. இன்றைய தேர்தல் களத்தில், வைகோ ஒரு துறவி!”
ஆர்.பாஸ்கரன், சென்னை-75.
”மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?”
”மறைமுகமாக அல்ல… நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும் இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர்தான் அரசியல். தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதைவிட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார். இந்திய அரசியலில், இதுவரை யார் வரக் கூடாது என்றுதான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக் கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள். என் வாக்கு… ஜெயலலிதா வர வேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக!
ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!”
ஆ.கதிர், மதுரை.
” ‘காந்திய மக்கள் இயக்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்… காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா?”
”நம் சமுதாயம் சகல மட்டங்களிலும் ஆரோக்கியம் இழந்து அழுகிப்போனதற்கு ஒரே காரணம், காந்திய வழியில் இருந்த நாம் விலகி நடந்ததுதான். கிராமம் வரை அதிகாரப் பரவல், தற்சார்புப் பொருளாதாரம், சிறுதொழில் வளர்ச்சி, தாய்மொழி வழிக் கல்வி, ஆடம்பரம்அற்ற எளிய வாழ்க்கை முறை, புலனடக்கம், கட்சிகளற்ற ஜனநாயகம் என்ற காந்தியத்தின் தடத்தில் நாம் கால் பதித்து நடந்திருந்தால், ஊழலற்ற பொது வாழ்வு, ஏழ்மை இல்லாத இந்தியா இந்நேரம் உருவெடுத்து இருக்கும். காந்தியின் எல்லாக் கொள்கைகளையும் கண் மூடிப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் குறிப்பிட்ட கொள்கைகள் எந்த நிலையிலும் ஏற்கத்தக்கவை. போராட்ட முறையில் காந்தியப் போர் முறை ஒன்றுதான் உன்னதம். அதிக உயிர்ச் சேதம் இன்றி, அதிகாரத்தைப் புரட்டிப் போடும் அகிம்சை. இந்த ஆயுதம்தான் முபாரக்கை எகிப்தில் முடக்கியது. இந்த ஆயுதத்தை ஈழத்தில் மக்கள் தொடர்ந்து பிரபாகரன் தலைமையில் ஏந்தி வீதிகளில் நின்று இருந்தால், ஈழம் தமிழரின் தன் நாடாய் இந்நேரம் பிறந்து இருக்கும். இவ்வளவு அழிவுகளை என் இனம் அங்கு சந்தித்து இருக்காது. ஒரு லட்சம் தமிழர் என்னோடு காந்திய மக்கள் இயக்கத்தில் சேர்ந்து நடந்தால், எந்த அரசியல்வாதியும் தவறு இழைக்க முடியாத சமூகத்தை நான் சமைத்துக் காட்டுவேன்.
இழப்புகளையும் வலிகளையும் என்னோடு சேர்ந்து அனுபவிக்க நீங்கள் தயாரா? முதல் நிபந்தனை, நாம் பதவி மறுப்பாளர்களாகப் பணியாற்ற வேண்டும்!”
எம்.பிரபு, தஞ்சாவூர்.
”உங்கள் இளம் பிராயக் காதல் அனுபவம் குறித்துக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?”
”என் காதலி… தெய்வத்தின் சிருஷ்டியில் அவள் ஒரு தேவதையின் வார்ப்பு. அவள் பூக்களில் அனிச்சம்; புள்ளினங்களில் அசுணம். அவளுக்கு மலர்களைவிடவும் மென்மையான மேனி; பளிங்கைவிடவும் பரிசுத்தமான உள்ளம். அவளைச் சந்திப்பதற்கு முன்பு, என் இதயம் வெறும் கருங்கல்லாய்க் கிடந்தது. தன் நயன உளிகளால் அவள்தான் அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு சிலையாக மாற்றினாள். இப்பாது சிலை இருக்கிறது. அந்தச் சிற்பியைத் தான் காணோம்!”
மா.வடிவேல், சிதம்பரம்.
‘துக்ளக்’ ஆசிரியர் சோ பற்றி தங்கள் கருத்து?”
”நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்பவர். பெரும்பான்மைக் கருத்தோடு இயைந்துபோவதுதான் எழுத்துலகத் தர்மம் என்று ஏற்காதவர். ஒரு தனிமனிதனின் பேனாவை மட்டுமே நம்பி, ஓர் இதழை 41 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று சாதித்தவர். பொய்யாக யாரையும் புகழ்ந்து பேசத் தெரியாதவர். ஆனால், பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கும் ஓர் அழுத்தமான ஆணாதிக்கவாதியாகத் தன்னை வேண்டும் என்றே வெளிப்படுத்திக்கொள்பவர். இதில் ஜெயலலிதாவுக்கு மட்டும் அவ்வப்போது விதிவிலக்கு வழங்குபவர்!”
கோவிந்தராஜ், வாணியம்பாடி.
”உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர்களின் படைப்புகள் எவை?”
”பாசாங்கு மொழியில், சரிகை வேலைப்பாடுகள் இல்லாமல், மண்ணின் ஈரம் மணக்க ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கையின் நிறத்தை இயல்பாய் வடித்தெடுத்த இளம்பிறையின் ‘நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்ற படைப்பும், ஒரு பெண்ணின் நுண்மையான அந்தரங்க உணர்வுகளைக் கலை வடிவம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே எழுத்தில் இறக்கிவைக்கும் அற்புதத்தை நிகழ்த்திய சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற படைப்பும்!”
என்.பாலகிருஷ்ணன், மதுரை.
”முழுக்க முழுக்க சுயநலவாதிகளாக இருந்துகொண்டு, பொது நலத்துக்காகவே வாழ்வதுபோல் வலம் வர இந்த அரசியல்வாதி களால் எப்படி முடிகிறது?”
” ‘வேஷங்கள் போட்டுப் போட்டு… அது
தோல், சதை, எலும்புக்குள் இறங்கி,
வேஷமே உங்கள் இயல்பாகிவிட்டது’
-என்ற புவியரசின் கவிதையை நீங்கள் படித்து இருந்தால், இந்த ஐயம் உங்களுக்குள் உருவாகி இருக்காது. அரசியல் உலகில் அடுத்தவர் குருதியில் ஆயுளைப் பெருக்கிக்கொள்ளும் கொசுக்களின் கூட்டமே அதிகம். சொந்த நலனுக்காக நம் தேசத்தைக்கூடத் தெருவில் நிறுத்தத் துணியும் இந்த முகமூடி மனிதர்களின் சுய முகம் காண்பது அவ்வளவு எளிதான செயல் அன்று!”
அ.யாழினி பர்வதம், சென்னை.
”உலகமயமாக்கலால் கல்வி முறை, நாகரிகம், பழக்க வழக்கம், ஏன் வாழ்க்கை முறையே மாறிப்போன இந்நாளில், காந்தியம் இனியும் சாத்தியமா?”
”நோய் நிறைந்த இடத்தில்தானே மருத்துவர் தேவை. வெள்ளாடு மேயும் விளைநிலத்துக்குத்தானே வேலி தேவை. வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்துக்கு எதிராகத் தியாகம், புற ஆரவாரங்களுக்குப் புறம்பாக அக நாகரிகம் வளர்த்தெடுப்பதுதான் காந்தியம். உலகமயமாக்கல் சீதனமாய் நம்மிடம் கொண்டுசேர்த்த நுகர்வு வெறியின் முற்றுகையில் மூழ்கி இருக்கும் இளைய சமூகத்தின் வாழ்வை முறைப்படுத்து வதும், நெறிப்படுத்துவதும் காந்தியத்தால் மட்டுமே சாத்தியப்படும்!”
இரா.தியாகராஜன், நாகப்பட்டினம்.
”ஒரு அரசாங்கமே வீதிக்கு வீதி மதுக் கடைகளை நடத்துவதும், அதனால் இவ்வளவு வருமானம் என்று சொல்வதும், யாரும் பெரிதாக இதை எதிர்க்காததும், வெட்கக்கேடான செயல்தானே? இந்த நிலை எப்போது மாறும்?”
”அரசு வருவாய் அதிகரிக்க ‘விலைமகளிர் விடுதி’ நடத்தாதவரை நல்லது என்று மன நிறைவுகொள்ளுங்கள்.
குடிப்பவரையும் கெடுக்கும்: குடும்பத்தையும் கெடுக்கும் என்று குடிமக்கள் உணராதவரை மதுக் கடைகளுக்கு மூடு விழா நடக்கும் வாய்ப்பு இல்லை!”
ரா.ரவி, நாமக்கல்.
”பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, பகுத்தறிவுத் தந்தை பெரியார்… இவர்கள் எல்லாம் இன்று உயிரோடு இருந்தால்..?”
”காமராஜர் கதர் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனை இழுத்து மூடிஇருப்பார். ‘காங்கிரஸுக்கும் கழகத்துக்கும் ஒரே லட்சியம்தான்’ என்று கலைஞர் சொன்னதைக் கேட்டதும், கழகத்தைக் கலைத்துவிடும்படி அண்ணா ‘தம்பிக்கு’க் கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். பெரியார் முதல் வேலையாக, வீரமணியைத் திராவிடர் கழகப் பொறுப்பில் இருந்து விலக்கி இருப்ப£ர்!”
வி.தங்கம், செய்யாறு.
”திராவிடக் கட்சிகள்போல் சிறந்த மேடைப் பேச்சாளர்கள் காங்கிரஸில் உருவாவது இல்லையே… ஏன்?”
”சிறப்பாகப் பேசத் தெரியாதவர்களும் ஒழுங்காக எழுத முடியாதவர்களும்தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக் குள்ளர்கள் ஒருபோதும், தம்மைவிட ஓர் அங்குலம் உயரமானவர்களைக்கூட உடன் இருக்க அனுமதிப்பது இல்லை!”
எஸ்.டேனியல் ஜூலியட், கோவை.
”இன்றைய இளைஞர்களிடம் தேச பக்தி வளர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?”
”இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் களத்தில் மோதும்போது தேச பக்தி பொங்கி வழிகிறது. சக மனிதரின் துயர் துடைப்பதில் தன் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்குச் சிறிதும் இடமின்றி, சுய நலத்தில் சுருங்கிவிடுவதில் தேச பக்தி வைகை மணல்போல் வறண்டுவிடுகிறது. தேச பக்தி என்பது வெறும் மண் சார்ந்தது இல்லை; மக்கள் நலன் சார்ந்தது!”
ரேவதிப்ரியன், ஈரோடு-1.
”இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுரை கூறினால் எள்ளி நகையாடுகிறார்களே…?”
”வரைமுறையற்ற வாழ்வை நடத்துபவர் வள்ளுவம் பேசுவதையும், மதுவின் போதையில் மயங்கி நிற்பவர் மகாத்மாவின் பாதையில் நம்மைப் பயணிக்கச் சொல்வதையும், மாமிசம் நாறும் வாயோடு வந்தவர் வள்ளலாரின் உயிர் இரக்கம் குறித்து உரை நிகழ்த்துவதையும் பார்க்கும் இளைஞர்கள் எள்ளி நகையாடாமல் என்ன செய்வார்கள்?
‘என் வாழ்வே என் செய்தி’ என்று மகாத்மாவைப்போன்று எத்தனை மனிதர்களால் சொல்ல முடியும்? ஆயிரம் வார்த்தைகளைவிட, ஒரு நற்செயல் வலிமையானது. அவர்களுக்கு முன் மாதிரியாக நாம் வாழும் வாழ்க்கையில் நடந்து காட்டுவோம். வார்த்தைகளால் வானத்தை வளைக்க முடியாதே!”
பி.கோபி, தூத்துக்குடி.
”ஆசை – நப்பாசை – பேராசை… என்ன வித்தியாசம்?”
”எம்.ஜி.ஆரைப் போல் திரையுலகில் ஒரு நடிகராக வலம் வர விரும்புவது ஆசை. அவரைப் போல் கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்புவது நப்பாசை. முதல்வர் நாற்காலிக் கனவில் மூழ்குவது பேராசை.”
க.ராஜா, திருவண்ணாமலை.
”விஜய்காந்த் நேர்மையான அரசியல்வாதியா… அல்லது அப்படி நடிப்பவரா?”
”அரசியல் உலகில் நேர்மை உறங்கும் நேரம் இது. உண்மையைப் பற்றிப் பேசுவதைவிட, உண்மையாக வாழ்வதுதான் முக்கியம். விஜய்காந்த் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக நடப்பாரா? காலம் எந்த முகமூடியையும் ஒருநாள் கழற்றிப் போடும். அதுவரை காத்திருங்கள்!”
One Comment
ரவி
1. ”பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)
2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)
3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)
4. லூயி பிஷரின் ’காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)
5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)
6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)
7. ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)
8. ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)
9. ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)
10. ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)//////
.
.
ஜெ மோ புத்தகம் தவிர பிற புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?கொஞ்சம் உதவுங்கள்